Posts

Showing posts from June, 2018

தோசை...வெளியிடை...கண்ணம்மா!

Image
காற்றில்லா இடத்திலும் என் தோசையைச்சுட்டது நானே. பிரபஞ்சப்பசிக்கு பால்வெளிகள். நாம் பிறந்த பசிக்கு பிரேக் ஃபாஸ்ட்டும், லன்சும் டின்னரும். என்னைச்சுற்றும் பால் வெளி. பால் வெளி போல என்தோசை. சுற்றிச்சுழலுது பூமி அதை சுட்டிக்காட்டுது தோசை. எண்ணங்களால் வாழ்க்கை, எண்ணியே இருந்தால் வழுக்கை. சூன்யத்தினின்று சுழல். சுட்ட மாவாய் தோசை. காற்று வெளியிடை தோசை 😂 . கண்ணம்மா! மாவு வெளியிடை காற்று. பால்வெளியிடையே பூமி ! நானொருவள் சுழற்றும் கரண்டியாலே நான் படைப்பாளி ! தானே தான் சுற்றும் பால்வெளியாலே நாம் உயிராளி ! ராஜாளிப்பறவையென்றன் தோசை. காலையோசை விடியும் என் தோசை சுடுமோசை கேட்டு. எனக்குள் ஓடும் சுழலாய் கரவட்டம், கரகாட்டம் & தோசை வட்டம். சுருட்டிப்போட்டு தின்று நின்றால் மனவோட்டம், ஓடி வந்து சீட் பிடித்து நின்றாலும்... மனசுக்குள் சுழலும் தோசை வட்டங்கள், ஆசை வட்டங்கள். பிரபஞ்சயோடையில் நீந்துகின்ற பால்வெளிக்குள் என் சூரியக்குடும்பம். தூசிலும் தூசென்றால் , தோசை வெளியிடை கண்ணம்மா உன் காதலும் அதனினும் மெலிசா... மெலிசா...? A Gladys Stephen cookery  😂 !

நிலவே...

Image
மாறா நிலவே, மல்லிகை நிலவே. சூரிய சுகத்தில் முகம் காட்டும் நிலவே. மஞ்சள் முகமாய் நீலவான் நிலவே. நானும் நீயும் ஒன்றே நிலவே. பிறையாம் பயணம் மாத, மாதமாய் பயணம். சில நேரம் பௌர்ணமி, சில நேரம் அபௌர்ணமி  😂 . தேய்தலும், வளர்தலும்... உன் போலே நான், என் போலே நீ. நீங்காதிரு. இருளாய் தெரிந்தாலும், அங்கேயும் நீ. உன்னுள் நான் வளர்கின்றேன், என்னில் நீ வனைகின்றாய். சித்திரப்பாவைகளாய் நானும், நீயும்... விண்ணைத்தாண்டி வருவாயா? நான் உன்னைத்தேடி வருவேனா? நிலவே ! A Gladys Stephen dream ! 😀

ஆதரவாய் சாய்தற்...

Image
ஆதரவாய் சாய்தற் பொருட்டு இருக்கை சாய்ந்தால், அங்கேயும் ஞாபகங்கள். தொடு பொருட்கள் தொடுவதில்லை.  தொடுவானமும் தொடா வானமே. கர்வக்கரிசனமெலாம் கண்ணாமூச்சி நாடகமே. நானென்றும் நீயென்றுமறியாத நாமாக இல்லாத நேசமெலாம், ஒரு நாடகத்தின அங்கமே. பயணத்தின் பாரமாய் நானிருந்தாலும்  ஒவ்வோர் பகலிலும் சாய்கின்றேன்.  இருக்கை விட்டெழுகையில்  வலக்கரம் வளைக்காதனுப்புகின்றாய். மாலையிலும் நான் வருவேன், மறக்காது ஏந்திக்கொள். பயணங்கள் தொடருகின்றன. ஆதரவாய் சாய்தற் பொருட்டு வரும்  வாழ்வுப்பயணிகள் சாய்கின்ற  ஒவ்வோர் இருக்கையும் மௌனமாய் சிரிக்கும், சொல்லாமல் சொல்லும் " குட் மார்னிங் " எனக்கு மட்டுமே கேட்கும். A Gladys Stephen travelogue  😀 !

திரும்புகின்றேன்

ஓய்வற்ற பகலின் கடமைகள் முடித்து. திரும்புகின்றேன். முகத்திலறை காற்று முந்தானை முட்டும் பார்வை,  முக்கிச்செல்லும் பேருந்தென தெரிந்த வழிகள். தெரிந்த பயணம்.  ஒருத்தியாய் என் பயணம். மனசுக்குள் கேள்விகள். பதில்கள் என்னவோ அவர்களின் பரலோகத்திலாம். . என் கடிகாரப்பாதையின் கருத்துருக்கள் உங்கள் சமுதாய மேசைகளில் திருப்பியனுப்பப்பட்டாலும் என் அலுவலின் ஆணவத்தை விட்டு விலகேன். தன் மரியாதைப்பயணத்தில் எளக்கார எகத்தாளங்கள் எனக்கு தூசே. சுய மரியாதை தாண்டிய சுக தேவதையன்று நான். சுழன்றடிக்கும் பத்ரகாளி. சுட்டெரிக்கும் சூரியச்சுடர். நிலவென்று வர்ணித்தால் நிசப்தமாகி விட நானென்ன தென்மேற்கு பருவக்காற்றா? மானுடத்தை புரட்டிப்போடும் மஹா புயல். வீடு திரும்பும் வேங்கைப்புயல்!!

விடை பெறும் கேள்விகள்.

நாளையில் நானோர் விடையாவேன். கேள்விக்கு வந்த பதிலாவேன்.  கேள்விகள் முடிந்த பதிலாவேன். விடைபெறும் விடையாவேன். என் விடயங்கள் முடித்த நடையாவேன். தனியாகவே நான் வந்தேன், தவறாதே நான் செல்வேன். புரியாத புதிரெலாம் புரிய வைத்து பிரிவாவேன். எனக்கென்று எதுவுமில்லை. என்னால்தான் எதுவுமில்லை. முன்னாடி வந்து நின்று புகழாரம் போற்றினாலும்  நானாக எதுவுமில்லை. எனதாக எதுவுமில்லை. வாழலாய் நான் வருத்தங்கள் ஏதுமில்லை.  புன்சிரிப்பின் பொருளெலாம் புரிய வைக்க நானில்லை. சிறகாய் என் பயணம். சிரிப்பாய் என் சாசனம். மானுட நாளில் நானோர் கடமை. வாழலின் போக்கில் வழமை. சந்திப்புகளும், சம்பாஷணைகளுமே நான்.  அதையும் தாண்டிய நானான என்னை நானறிவேன். என்னை யாரறிவார்? பயணங்கள் தொடரும், பல்லவிகளும் தொடரும். மாறா உலகின் மாறா மாற்றமாய் நானும் தொடர்வேன். எல்லோர் போலும், எல்லா காலையிலும்!

எரிதலாம் மௌனம்.

எரிதலாம் மௌனமெலாம் எனக்குள்ளே.  புரிதலாம் புண்ணியத்தால் பேச்சுக்களை கைது செய்கின்றேன். ஆறுதலென்ற பேரில் "அவனை" நம்பென்ற  தட்டக்கழித்தல் பதில்கள்.  புனிதமாக்குதல் போர்வையில் துயரங்களை  தியாகமாக்கிவிட்டால் வாழல் மோட்சமாகி விடுமா? இன்றின் வலிகளை மறுக்கத்தான் வேதவிசாரணைகளென்றால்,  சமூக கட்டமைப்புகளின் பாதுகாவலுக்கான பலி மேடை என் வாழ்வென்றால்  இது அபத்தத்தின் விளங்காவோவியமேயன்றி வேறொன்றுமில்லை. இருப்பவன் இல்லையென்கின்றான்;  இல்லாதவன் இருக்கென்கின்றான்.  பொய்யாம் வாழ்தலில்தான் எத்தனை மெய்ப்பொய்கள்? ஊனுடம்பின் ஓயல் வரை எத்தனை சால்ஜாப்புகள்! தெரிந்தே சொல்லும் பொய்களாய் ஆறுதல் வரிகள். ஆறாதெனத்தெரிந்தும் அருமருந்து வாசகங்கள். அமர்ந்திருந்து ஆழ்ந்தலில் எரிதலாம் மௌனமே என் பேச்சு. என் மூச்சின் பேச்சு !

முன்மேகம்

தீர்க்கமாய் செல்லும் தீஞ்சடரை பஞ்சுப்போர்வையிட்டா பதுக்கப்பார்க்கின்றாய்? காலத்தின் கையில் நீ அம்பு. நில்லாது செல். ஆனாலும் உன் திசையை முடிவு செய்யும் விரல் நீயே. ஒன்பதாம் திசை உனதாகட்டும். எட்டுகள் எட்ட நிற்கட்டும். உன் முடிவுகள் நீயே எடுத்ததாகட்டும். தனியேகூட்டத்தில் நின்றாலும் தனித்தே நில். எல்லாரையும் போலாகி நின்றால், எழுநூறுக்கும் மேலான கோடியில் உன் பெயர் உனதல்ல. ஆசைப்படாதே உன் பெயர் எழுதப்படும். நீயே உன் வரலாறு. முன்மேகமெல்லாம் சூரியச்சுடர் முன் சில காலமே.

வயது வந்தோர் கல்வி; வயதானோர்க்கும் கற்பி.

ஒரு குரூரத்தின் முகம் அசிங்கமாயிருக்க வேண்டிய அவசியமில்லை. அழகன் சிரிப்புப்புற்றின் பின்னும் நல்ல பாம்பர் உண்டு. ஆன்மீக புலித்தோலிலும் அருவருப்பின் கறைகள் உண்டு. இல்லத்து சொந்தத்திலும் இளமையான தாத்தாக்கள் உண்டு. ஈரமற்ற இதயம் கொண்ட பதிவான பணியாளருண்டு. உற்றார், உறவிலும் தொட்டுப்பேசும் தொந்தர் உண்டு. ஊரெங்கும் ஊர்ந்து செல்லும் வேட்டையர் உண்டு. எழில் தவறன்று. வனப்புகளும் ஸ்தனங்களும் ஆபத்தன்று. ஏழாம் அறிவால் ஆறறிவரை அறிந்து கொள். ஐம்பூத மெய் காட்டும் ஐம்பூத மெய் காட்டும் அழகெல்லாம் கானலே. ஒருமுகமனசெல்லாம் வெல்லும் போரினில்  தேகச்சிதைவரை கண்டு கொள். வென்று நில். ஓவியப்பாவையர் சிதைத்தலை தடுத்திட கருத்தாய் காத்திடு. ஓளஷத்காதலை, அமிழ்தாம் காமுறலை. உலகம் காத்திட உணர்த்திடு. அஃதே நீ அறிய வேண்டியதும், அறிவிக்க வேண்டியதும். பி.கு: ஐ லவ்யூ சொல்லி ஆசைகள் தீர்ப்பதிலும் பெரும்பாவம் வேறேதும் இல்லை

இன்றெனக்கு உண்டு

ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் தருணம். ஒவ்வோர் வாய்ப்பு. தொடாமல் விட்டவைகளை தொட முன்னேறுவேன்,  தொடர்ந்து முன்னேறுவேன். நேற்றின் வீழ்ச்சியை இன்று குத்திக்காட்டினாலும், இன்றிலேயே நேற்றை வெல்வேன். காலம் கடந்தும் என் உறுதி நிற்கும். நேற்றுக்கும் நாளைக்கும் இன்றே முகவரி. இன்றிலில்லாது, இன்றிலேயில்லாது வேறென்று வெற்றி? நின்று செல்லாத சூரியனாய், நிலைத்து விடாத சந்திரனாய் நானும் வாழ்வேன். நாநிலம் நடுவே நானோர் பாவைக்குயில், நா நிதம் பாடும் நானோர் கானக்குயில். நில்லாது செல்லும் என் பாடலில் வாழ்வேன், நிலைக்காத துன்பங்கள் நாளும் வெல்வேன். இன்றெனக்கு உண்டு. அது போதும் எனக்கு. இன்றில் வாழ்ந்து என்றென்றும் வாழ்வேன். இக்காலை வெல்லும்!

நீங்காதிரு

ஒரு சாதாரண வாக்கியம். கேள்வியா, பிராத்தனையா, கேவலா, ஹேஷ்யமா? எதாகவும் இருந்து விட்டு போகட்டும்.  ஒரு உயிரின் விருப்புநிலைக்கான பதிலை  திரும்ப திரும்ப கேட்டுக்கொள்ளலுக்கான சந்தர்ப்பமாக்குவதில்  கவலையா, சந்தேகமா இல்லை சங்கடமா? எதுவுமில்லை. உன் இருப்புக்கான விருப்பாயே என் கணங்கள் என்ற அறிக்கையா? நலமே, நீ இங்கு நலமே, என்பதை அங்கிருக்கும் என்னிடம் சொல்லிக்கொள். உருகலுக்கான உத்திரவாதங்கள் சொல்வதிலேயே காலங்கள் சென்றால் உருக்குலைந்து போவேமே. மிச்சமிருக்கும் நாட்களின் நகர்வெலாம் நகர்த்திச்செல்,  தகர்த்துச்செல்ல நீ என்ன சேலச்சாலை மரமா? நானென்ன கூலிக்குடைக்கும் ஜேசிபியா? உன் பாதையில் செல். விலகமாட்டேன். உத்திரவாதங்களால் நித்திரை கொள். அன்பென்பது எதிர்பார்ப்பன்று. தர்மம்! அறம்! அறம் செய்வதே அன்பின் நிறம் ! அஃதெப்போழ்தும் மங்கலச்சிவப்பே. என்னிதயம் போல்.

நலமே நாளுமே

விடிகையிலும் விடாப்பிடிவாதமான நம்பிக்கை.  நன்மைகள் விடியும் . நலம் விளையும்.  தன்னந்தனியே நட்டாற்றில், நடுக்காட்டில் விடப்பட்டாலும்  நன்மைகள் நெருங்கி நலம் தான் நல்கும். நம்பிக்கை.  தெய்வதச்செயலிகள் செயலிழந்தாலும் , என் நம்பிக்கை வெல்லும். நானோர் காட்டுச்செடி, நாடோடிக்கால்,  வலியில் விளைந்த நெற்வயல். வருத்தங்கள் ஜெயித்த வானவில். என் மன வானின் கண்ணீர் நடுவேயும்  வண்ணக்குடை விரிப்பு, என் எண்ணத்தின் நீள் பரப்பு. வானம் தொட ஏணிகள் தேவையில்லை எனக்கு. விழிநோக்கி நான் பார்க்கும் தொலைவெலாம் வெல்வேன். வானமும் வசப்படும், இவ்வையகமும் கைக்கருகும். நம்பினோர்க்கெலாம் நம்பிக்கையே வாழ்க்கை ! நம்புக, நலமே நாளுமே.

எங்கே எனது கவிதை ?

நெஞ்சோடணைத்து, உச்சி மோந்து,  தாயாகி எனைத்தாங்கி, உள்ளுக்குள் வாழும் கவியே,  எங்கே என் கவிதை? கண்ணுக்குள் தான் வாழ்ந்து, காதுக்குள் தான் பேசி,  விழுகையில் தாங்கி, விடிகையில் வந்து கவிதைகள் பேசும் கலையே எங்கே என் கவிதை? நீ என்றும், நானென்றும் வேறில்லையே,  நாமென்று சொன்னவனே எங்கே என் கவிதை? விடிகையிலும், அடைகையிலும் நீயாய் வந்தவனே ,  நானெங்கே என் கவிதையெங்கே? தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா ! கவிக்குள் காதல் வைத்தால் நிந்தலாலா! எங்கே எனது கவிதை? மூச்சடக்கி முத்துக்குளிப்பாயோ என்னவோ,  முப்பொழுதும் கவிதைகளால் என்னை முற்றுகையிடு  இல்லையேல் முழங்காலிடு. எங்கே எனது கவிதை?

கூந்தலில் முடிந்து வைத்த சூரியன்!

ஆதங்கங்கள் அற்ற வாழ்க்கையில்லை. ஆற்றாமைகள் இல்லாத வாழ்க்கையில்லை.  இரண்டையும் வெல்லாமல் போவதில்லை என்ற தீர்மானமே உறுதி.  இறந்த இறப்பை பேசுதலென்பது விழலுக்கிரை நீர். வரும் வருங்காலமென்பது கானல். நிகழும் இன்றில் நன்று படலே என்னாற்றுப்படை! எழுக ! வீழ்வெலாம் விபத்தென்றே இருக்கட்டும். நம்பிக்கை என்பது எதிர்பதங்களற்ற சிந்தனை மட்டுமன்று  நேர்படும் சொல்லும்-செயலும். சூரியனற்ற வானை சொக்கவைக்கும் சந்திரச்சுடர் கூட சூரிய இரவலே. சாயாக்களின் மாயங்களே, பாவனைகளின் சாதனைகளே கலையும்-வாழ்வும். வாழ்க. இறுதிவரை வாழ முயல்க . அஸ்தமனம் என்பது ' அவ்வளவு தான்' என்று முடிவதல்ல. 'நாளை விடியும் ' என்பதன் அறிகுறி. சில பூபாளங்களின் விதைகள் அஸ்தமனச்சிவப்பிலும், அடரிருட்டிலும் தான் கருத்தறிக்கின்றன. இருள் விலகும். ஒளி படரும் என்பதே பகல்களுக்கான நம்பிக்கை. Celebrate darkness to face the light ! Unless there is darkness there is no word ' Light '.

காலை ...

மெல்ல விழி திறந்து , சிறகுயிர்கள் குரல் கேட்டு,  இன்னும் துயிலேனோவென எழுதல் மறுத்தும்,  வாழ்வின் கடமைகள் 'வா மகளே ' என கரம் நீட்டியழைக்க,  சோம்பலாய் சிணுசிணுப்பாயெழுந்தாலும்,  கண்ணாடி முன் நின்று கண்கள் தான் பார்த்து,  தானே தான் சிரித்து ' குட் மார்னிங் ' சொல்லி விட்டு  நானேயறியாது நானெடுக்கும் ' பிரஷ்' ஷிலிருந்தே  வாழ்வின் வேகம் பழக்கமாய், வழக்கமாய். மாறாத வாழ்விலும் மாற்றங்களே மாறாதாம்.  மாறி ,மாறி மாறாத மாற்றங்களாய், மாற்றங்களால் வாழ்க்கை. ஒரு புன்னகை என்பது போர்வையா, முகமூடியா? நாமறியோம். அறியாதே நாம் சுமக்கும் முகத்தாலே கண்டுகொள்ளப்படுகின்றோம்,  முகத்தாலே முகவரிகளாகின்றோம். முகமும், அகமுமே வாழ்வின் முகவரிகளென்றான பின்  அகமலர்ந்து, முகமலர்ந்து நானும் சொல்வேன் ' காலை களிப்பாகட்டும்,  கடமைகள் சுகமாகட்டும்!' Good morning! Have a serene Saturday!

அதன் பிறகும்.

ஒரு சந்தியா ராகத்தின் யௌவனமாய் நினைவில்  நின்ற பெருங்காட்சிப்பொருளாய் உன் ஞாபகம். ஒரு மழைநாளின் குடையாய் நீ நனைந்து  என்னைக்காத்த தேம்பாவணித்தமிழ் நாட்கள். ஒரு ஒட்டடைக்குச்சியான என் மீதும்  பிரேமைகள் கொண்டு அழகாயிருப்பதாய்  சொன்ன அதிகபட்ச கவிதைகள். தூரம் தொலைந்த பிம்பம் தொடர்ந்து  புள்ளியான பின்னும் மனோவேகமெடுத்து  நீ வரைந்த வேதிமக்கோலங்கள். ஒரு பதின்வயதின் பதில்களற்ற கேள்விகளாய்  கேவல்களாய் முடிந்ததை நினைக்கையில்... நாமெல்லாம் நாடோடிப்பாடல்களோவெனும்  கழிவிரக்கமெழுவதை தவிர்க்க இயலவில்லை. காலச்சுவடுகளின் பாதை வழியே பயணம் போங்கள்... அதன் பிறகும் ... என்ற வாழ்க்கை இல்லாமலில்லை!

மழைக்காலம்

வானம் திறந்திருக்கின்றது. அவரவர் கடமைகள் வாய்த்திருக்கின்றது. பகலவ பல்லக்கில் மானுடம் நகர்கின்றது. பருவ கால மாற்றங்களூடே குடைகளும் பயணிக்கின்றன. வானிலை மறந்த வேலைகள் வேகம் கற்பிக்கின்றன. கண் முன் நீண்ட சாலைகளும் கைக்கருகும். தொடா வானமும் வசமாகும். நம்பாதவர்க்கும், நம்பியவர்க்குமாய்  காலைகள் காத்திருக்கவே செய்கின்றது. கடன் செய்தலே பணி, பணி செய்தலே கடன். அன்பிலோர் உலகமடங்கும் வரை அன்பாலே வெல்லும் நாட்கள். நிபந்தனைகளற்ற அன்பினாலே வெயிலும், மழையும். மாந்தளிர்காள் செழிக்க பெய்யெனில் பெய்யும் மான்சூன்! Happy June! Happy monsoon!

காற்றில் ஓர் பயணம்

காற்றில் ஓர் பயணம். முகம் மோதும் கரும்புக்காற்று. உள்ளுக்குள் எழும் கேட்காத கானங்கள். தூரத்து பறவைச்சப்தம். எங்கோ ஓர் இடிச்சப்தம். மழை வாசம், மண் வாசம் . தனியே விழிகள். விழி விரிய நான் தேடும்  கானகம் நடுவேயும் கருங்காற்று. ஒரு அமானுஷ்யத்தின் நிழலில் அமர்கின்றேன். அங்கேயும் அதரம் திறவா பைரவப்பறவைகள். எங்கேயோ ஒருத்தியின் பெருமூச்சில்  புறப்பட்ட புயல் கோவில் மணிகளில் கோலம் போட்டது. மேகமறைவில் பகலவயாத்திரை. காலம் தன் வேகத்தில் செல்கின்றது. நாமே கடந்து நிற்கின்றோம். ஆத்மாவின் ஒரே தேடலாய் உள்ளுக்குள்  கொலுவேற்கும் அம்மாவின் சுவாசம் நானோ? உறைந்த சிற்பமாய் நீ மறைந்த கணங்களையும் தாண்டி கரும்புக்காற்றில் உன் முகம். உன் முத்தம். அம்மா ! விட்டு விலகா உன் ஞாபகங்கள் ஊனில், உயிரில்! நீ இருக்கின்றாயம்மா. இறப்பென்பது சம்பவமே. இறவாமை சரித்திரமே. எனக்குள் உலவும் அம்மாவே நீ என் அதிசயமே. அம்மாக்கள் எல்லாவிடங்களிலும்!

என்ன தவம் செய்தனை யசோதா?

ஒவ்வொரு நேற்றிலும் இன்னொரு நாளையின் கர்ப்பமிருக்கும். ஒவ்வொரு நாளையிலும் ஒரு இன்றின் மணியோசையிருக்கும். முக்காலமும் உன் நினைவிருக்கும். முப்பொழுதும் எப்பொழுதும் உன் பேச்சின் மூச்சிருக்கும். வாழ்வுக்கு நீ வைத்த பெயர் எதுவானாலும் இருக்கட்டும்.  என் பெயரில் உன் வாழ்வும்,  உன் பெயரில் நானும்  நம் பெயரில் நாமும் வாழ  என்ன தவம் செய்தனை யசோதா?

பிழைகளோடேயே..

பிழைகளோடேயே பிழைக்கின்றோம். தவறுகளோடையே தவழுகின்றோம். வருத்தங்களோடேயே வாழுகின்றோம். ஆனாலும்... தினந்தோறும் நமக்குப்பிடித்தவை  நலமாய் விடியுமென்றே நாளும் நம்பி எழுகின்றோம். மரத்துப்போய் மரணம் வரை நடந்தாலும்,  தினந்தோறும் பிறக்கின்றோம்  இழந்ததை கொடுப்போம், இயன்றதைக்கொடுப்போம். அன்பாலே உலகம், அன்பாலே உலகம். அன்புடன் காலையில், அன்பின் வணக்கம்.

தீக்குள் பூத்த மல்லிகை..

தீக்குள் பூத்த மல்லிகை நீ. ஒரு காகிதப்பூவாய் வளர்ந்திருந்தால் என்றோ பெய்த மழையில் உருக்குலைந்திருப்பாய். காட்டுச்செடி, நாடோடிக்காற்று. பேய்க்காற்றில் பிரசவித்த கவிதை உன் மௌனம். காயசண்டிகைகளைப்பார்த்திராத கண்ணீர் சண்டிகை.  பெருமூச்சுகளின் மொழிபெயர்ப்புக்கென்று நீ வாங்கியதெல்லாம் அகராதிகளையன்று. ஆழ் மனசை! ஒரு விபத்தால் தொலைந்து போயிருக்க வேண்டிய நீ வித்தாய் எழுந்ததெல்லாம் வித்தையன்று. வலிக்குதிரைகள் மேலேறி நீ நடத்திய அசுவமேத யாகங்களை முறியடிக்க நினைத்த அரசநினைப்பெல்லாம் வென்று மென்ற அமாமிசம் நீ ! ஆலகாலங்களை விழுங்கி ஆலாய் எழுந்த உன் உறுதியில் எழுவதன்றோ பெண்ணதிகாரம். வாழ்க ராசாத்தி, பெண்பிள்ளாய்! நானே. எனக்குள் நீயே.

நீங்கா நினைவுகள்

நீங்கா நினைவுகள் நெஞ்சில் நிறைந்திருக்கும். அதில் தூங்கா ஞாபகங்கள் நீந்தியிருக்கும். பதில் பேசா பேச்சுக்கள்  பதுங்கியிருக்கும். பேசாத மௌனங்களில் ஓசைகளிருக்கும்‌. அதை கேட்காத காதுகளுக்குள் இதயம் துடிக்கும். இதயத்தில் நீ, இமைகளுக்குள்ளும் நீ. எங்கெங்கு நோக்கினும் உன் முகம்  எப்பக்கம் பார்த்தாலும் உன் பிம்பம். பித்த சித்தமே, புத்த சப்தமே,  பொருள் குற்றம் தேடா நக்கீர யுத்தமே. முத்தயுத்தமாய் என்னைக்கொல்ல  இன்னோர் ஏதேனிலும் பழம் தின்போம் வா!

இடை வெளிகளாய்..

இடை வெளிகளாய் எதுவுமில்லை. நிஜத்தில் ஓயாத நினைவுகள். அன்பென்றால் என்னவென்று உன்னில்  கற்க்கத்தான் உன்னிடம் வந்துசேர்ந்தேனோ? காதல், காமம் தாண்டி கண்டு கொண்ட இந்த பிரியம்  அதே பிரியத்துடன் உன்னைத்தேடிக்கொண்டே தான் இருக்கும். நிஜத்தில் நீ அனுபவிக்கும் தினச்சடங்குகளின்  தன்மைகள் எனக்கு தெரியாது. ஆனால், வாழலுக்கும் சலித்துக்கொள்வதற்கும் நடுவே  மௌன குருவாகிப்போன உன் மர்மப்புன்னகை  தரும் அர்த்தங்கள் ஆயிரம். மூக்கு வழியாய் துவங்கி தொண்டை வழியே  வழிய விடும் உன் ஒவ்வொரு சிரிப்பிலும்  ஒரு அணுகுண்டின் கர்ப்பமிருக்கும்.